நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளை இணைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 7 கோடை விழா துவங்கியது.முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நாளை துவங்குகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சரிவர நடைபெறவில்லை. இந்த ஆண்டு கோடைவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், தெற்காசியாவில் புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இங்கு 31ஆயிரத்து 500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 5 அடுக்குகளைக் கொண்ட இந்த தோட்டம் 4 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது.சிறப்பு மிக்க இந்த பூங்காவில் தற்போது பூத்துக்குலுங்கும் ரோஜாக்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்க ஏதுவாக வரும் 14, 15ஆம் தேதிகளில் கண்காட்சி நடைபெறவுள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கண்காட்சி என்பதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதனையொட்டி அங்கு விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.