மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு (ஏப்ரல் 14ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
மீன் வளத்தை பெருக்கவும், பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 29-ந் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் இந்த 45 நாள் தடைகாலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மீன்பிடி தடைகாலம் நாளை முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலுக்கு வருகிறது.. இதையொட்டி தமிழகத்தில் கிழக்கு கடலோர பகுதியில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை இந்த தடை காலம் அமலில் இருக்கும்.
இந்த நாட்களில் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க அனுமதி கிடையாது. இருந்த போதிலும் நாட்டு படகுகளில் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லலாம். கேரளாவில் தடைகாலம் இல்லாததால் தமிழக மீனவர்கள் சிலர் அங்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர். மீன்பிடி தடை காலம் நாளை முதல் அமலுக்கு வருவதால் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமயல் எரிவாயு விலை உயர்வு, சமையல் எண்ணெய் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றால் பாதிப்படைந்துள்ள மக்கள் மீன் விலையும் உயரப்போகிறாதா என்ற அச்சத்தில் உள்ளனர்.