• Sat. Mar 22nd, 2025

மார்ச் 22ல் தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவின் முதல் ஆய்வுக்கூட்டம்

Byவிஷா

Mar 5, 2025

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அரசின் தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவின் முதல் ஆய்வுக்கூட்டம் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசை, கேரள அரசு அனுமதிப்பதில்லை. இதையடுத்து, அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அதிகாரிகளை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து 2025 பிப்ரவரி மாதம் நடைபெற்ற விசாரணையை அடுத்து, மத்தியஅரசை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழு அமைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, மத்தியஅரசு, அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை நியமித்து அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையின்போது, விசாரித்த உச்சநீதிமன்றம், புதிதாக அமைக்கப்பட்டுள்ள முல்லை பெரியாறு மேற்பார்வை குழு உடனடியாக கூடி சுமூக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் 4-வாரத்தில் தீர்வு காண முடியாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் நீதிபதிகளின் உத்தரவாக இருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து முல்லை பெரியாறு மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள குமுளியில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்திக்கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் பேபி அணையை பலப்படுத்த தமிழக அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது.
இதையடுத்து, மத்தியஅரசு, கடந்த ஆண்டு (2024) அக்டோபர் 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான இந்தக்குழுவின் தமிழக நீர் வளத்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ், நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் என 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கு 7-ந்தேதி குழு ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் தற்போது 22-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும். அணை தொடர்பான பிரச்சனைகளுக்கு 4வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.