சிவகாசியில் பழமையான கோயிலின் ராஜகோபுரத்தில் தீ பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கும்பாபிஷேகத்திற்காக இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவில் வழியாக திருமண நிகழ்ச்சிக்காக சீர் வரிசைகள் கொண்டு சென்ற போது பட்டாசு வெடித்துள்ளனர். அப்பொழுது ஏற்பட்ட தீப்பொறி கோவிலின் ராஜகோபுரத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயில் விழுந்தது. இதில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக தீ மளமளவென எரிய தொடங்கியது.
இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து குறித்து சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவிலின் ராஜகோபுரத்தின் மீது தீ விபத்து ஏற்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.