• Mon. Apr 29th, 2024

நடிகர் ஈ.ராமதாஸ் மறைவுக்கு திரைத்துறையினர், பிரபலங்கள் இரங்கல்

Byஜெ.துரை

Jan 24, 2023

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பிரபல நடிகரும், எழுத்தாளருமான ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர்,பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து விருகின்றனர்.
மோகன் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் திரைப்படத்தின் மூலம் 1986ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஈ.ராமதாஸ். அதனைத் தொடர்ந்து ராமராஜன் நடித்த ராஜா ராஜா தான், சுயம்வரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், எழுத்தாளராகவும் உலா வந்தார். பல்வேறு படங்களின் கதை விவாதங்களில் பங்கு பெற்றுள்ளார்.
வசூல் ராஜா MBBS படத்தில் வார்டு பாயாக நடித்தவர் அதன்பிறகு யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். விசாரணை திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக இவர் நடித்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. திரைப்பட விழாக்களில் இவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.


இந்நிலையில், ஈ.ராமதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு உயிரிழந்தார். அவரின் உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈ.ராமதாஸ் மகன் கலைச்செல்வன், “எனது தந்தை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் ஈ.ராமதாஸ் MGM மருத்துவமனையில் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணியளவில் முனுசாமி சாலை, கே. கே. நகர், அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.ஈ.ராமதாஸ் மறைவுக்கு திரைத்துறையினர், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *