எகிப்து நாட்டில் இறந்த உடல்களை மம்மி என்ற பெயரில் பதப்படுத்தும் வழக்கம் உள்ளது.எகிப்து நாட்டின் பிரமிடுகளில் ஆயிரக்கணக்கான மம்மிகளை பார்க்கலாம். எகிப்தில், ஆரம்பகால, கி.மு. 3500 க்கும் முன்னால், புதைக்கப்பட்ட உடல்கள் சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாக மம்மிக்களாக உருவாகின.
பொதுவாக மம்மிகள் 3000-5000 வருடம் பழமையானதாக இருக்கும். இந்நிலையில், எகிப்தின் 2000 ஆண்டுகள் பழமையான மம்மியின் வயிற்றில் பாதுகாப்பாக உள்ள கரு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு விஞ்ஞானிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
இது பற்றிய ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. ஊறுகாய் எப்படி கெடாமல் பாதுகாப்பாக வைக்கப்படுகிறதோ, அதே போல கருவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருப்பதாக இதுவரை கிடைத்த தகவல்களில் தெரிய வந்துள்ளது.
இது எகிப்தின் முதல் கர்ப்பிணி மம்மி என்று நம்பப்படுகிறது.குறிப்பிட்ட இந்த மம்மி பெண்ணின் வயது சுமார் 30 வயது இருக்க வேண்டும் என்றும், கி.மு. முதல் நூற்றாண்டில் அவர் இறந்திருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இந்த மம்மிக்கு ‘மர்ம பெண்மணி’ என்று பெயரிட்டுள்ளனர். கருவைக் கண்டறிய மம்மிக்கு CT ஸ்கேன் செய்ததில் ஆச்சரியத் தகவல் வெளி வந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்புடன் தொடர்புடைய முக்கிய ஆராய்ச்சியாளரான டாக்டர் வோஜ்சீஜ் எஸ்மண்ட் மற்றும் போலந்து அறிவியல் அகாடமி இது குறித்து கூறுகையில், எகிப்து அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் இதுவரை எந்த கர்ப்பிணி மம்மியையும் கண்டுபிடிக்கவில்லை, இதுவே முதல் கர்ப்பிணி மம்மி என கூறினர். மம்மியின் உடலில் இருந்து மற்ற உறுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்ட இந்த கரு ஏன் மம்மியின் உடலில் விட்டு வைக்கப்பட்டது என்பதை இதுவரை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் ஆய்வுக்குழு கூறுகிறது.
இந்த மம்மியின் வயிற்றில் காணப்படும் கரு இந்த செயல்முறையின் கீழ் இயற்கையாகவே பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இறந்த பிறகு, சடலத்தில் உள்ள கரு உட்பட சடலங்களில் உள்ள இரத்த pH கணிசமாகக் குறைந்து அமிலமாகிறது, அம்மோனியா மற்றும் ஃபார்மிக் அமிலத்தின் செறிவு காலப்போக்கில் அதிகரிக்கிறது. எனவே பண்டைய எகிப்தில் மம்மிகள் இயற்கையாக பாதுகாக்கப்பட்டது போல், இந்த மம்மியும் அதன் கருவும் பதப்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதுபோல் பல அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது தான் எகிப்தின் மம்மிகள்.எப்போதும் எகிப்து நம் ஆராய்ச்சியாளர்களை ஏமாற்றம் அடையவைத்ததில்லை.பல விசித்திரமான நிகழ்வுகள் நமக்கு வரும் காலங்களில் உள்ளிடக்கிதான் வைத்துள்ளது இந்த மம்மிகள்.