• Sat. Apr 20th, 2024

பிரபல ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் கைது

பிரபல ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 42 வழக்குகள் உள்ளன.

இவர் வெகுநாளாக தலைமறைவாகியிருந்த நிலையில், குணாவை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தது. இதனை அடுத்து அவரது மனைவி எல்லம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனது கணவர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்படலாம் என அச்சம் எழுந்துள்ளதாகக் கூறிய அவர், படப்பை குணாவை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

குணாவை என்கவுன்ட்டர் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும், சரணடையும் பட்சத்தில் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த மாதம் படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும், கூட்டாளிகள் மூலம் படப்பை குணா குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து, அவரின் கூட்டாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டினர்.

இந்த நிலையில் முக்கிய கூட்டாளியான மாம்பாக்கம் பிரபுவையும் அவருக்கு உதவிகள் செய்துவந்த போந்தூர் சேட்டுவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கையால் படப்பை குணாவின் கூட்டம் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *