கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை கோட்டைமேட்டில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலையில் வந்த கார் வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்த வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், வெடிப்பொருட்களை தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட் மூலம் ஜமேஷா முபின் வாங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் மொத்தம் 76.5 கிலோ பொட்டாசியம், நைட்ரேட் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 6வது நபராக கைது செய்யப்பட்டுள்ள அப்சர் கான் வெடி மருந்து சேகரிப்பில் உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.