எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நேற்று மாலை கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே உள்ள கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் 5-க்கும் மேற்பட்ட படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கியதோடு, மீன்பிடி சாதனங்கள், வலைகளை சேதப்படுத்தி, படகில் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர். அப்போது நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த கிளிண்டன், பேதுகு, வினிஸ்டன், தயான், மரியான், தானி, ஆனஸ்ட் ஆகிய 7 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.