நற்றிணைப் பாடல் 152:
மடலே காமம் தந்தது அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர
புலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்
எல்லாம் தந்ததன் தலையும் பையென
வடந்தை துவலை தூவ, குடம்பைப்
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று
யாங்கு ஆகுவென்கொல் அளியென் யானே
பாடியவர்: ஆலம்பேரி சாத்தனார்
திணை: நெய்தல்
பொருள்:
என் தலைவி மீது நான் கொண்ட காதல் மிகுதியால், என்னை மடல் குதிரைமேல் ஏறி வந்து, இவளைப் பெறுக என்று கூறுகிறது.
ஊர் தூற்றும் பழிக்கு மடல்-மா மேல் வரும்போது சூடும் எருக்கம்பூ தானே மாலை. வெயில் குறைந்து மாலை நேரம் வந்துவிட்டது. தனிமையில் கிடக்கிறேன்.
வாடைக்காற்று தூறல் திவலைகளை வீசுகிறது. கூட்டில் இருக்கும் ஆண் அன்றில் தன் பெண் பறவையுடன் இணை சேர குரல் கொடுக்கிறது. இரவு வேளையிலும் நான் தனிமையில் இருக்கிறேன். இவ்வாறு சொல்லிக்கொண்டு தலைவன் வருந்துகிறான்.