தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்தார். அப்போது மைதானத்தில் குழந்தையுடன் இருந்த மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி இந்த அரை சதத்தை குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக சைகை செய்தார்.
அதாவது கையில் குழந்தையை வைத்திருப்பதுபோன்று, பேட்டை வைத்துக்கொண்டு தாலாட்டு பாடுவதுபோல் சைகை காட்டினார். அப்போது அனுஷ்கா சர்மா பக்கம் கேமிரா திரும்பியது. அதற்கு அனுஷ்கா சர்மாவும் பதிலளிக்கும் வகையில், கோலிக்கு கையசைத்தார். இது தொலைக்காட்சி கேமராவில் பதிவாகி, பின்பு இணையம் முழுவதும் வைரலானது. ஏனெனில், இதுவரை அனுஷ்கா சர்மா – விராத் கோலி தம்பதியின் மகள் வாமிகா புகைப்படம் இதுவரை வெளியானதில்லை. விராட் கோலியின் மகள் வாமிகாவின் முகம் தெரியாதவாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டுமே இருவரும் சமூகவலைதளங்களில் இதுவரை வெளியிட்டு இருந்தனர்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, எங்களுடைய மகளின் புகைப்படம் நேற்று மைதானத்தில் எடுக்கப்பட்டு பலராலும் பகிரப்பட்டதை உணர்ந்துள்ளோம். கேமிரா எங்களை படம் பிடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை தெரியப்படுத்துகிறோம். இதுதொடர்பான எங்களுடைய நிலைப்பாடும், கோரிக்கையும் அப்படியேதான் உள்ளன. வாமிகாவை யாரும் படம் பிடிக்க வேண்டாம். அவருடைய படங்களை வெளியிட வேண்டாம் என முன்பு என்ன காரணங்களுக்காக கோரிக்கை விடுத்தேனோ அதையே மீண்டும் தெரிவிக்கிறேன், என கூறி உள்ளார்.
முன்னதாக, வாமிகா பிறந்த பொழுதே விராத் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில், “நாங்கள் வாமிகாவின் புகைப்படத்தை அவளது அனுமதி இல்லாமல் வெளியிட மாட்டோம். அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். எனவே யாரும் வாமிகாவின் புகைப்படத்தை எப்பொழுதும் வெளியிட வேண்டாம்” என்று தெரிவித்திருந்தனர்.
அதன்பிறகு விராத் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இணைந்து எங்கு வெளியே வந்தாலும் வாமிகாவின் முகத்தை மூடியே சென்றனர். முடிந்தவரை வாமிகாவின் புகைப்படத்தை வெளிவராமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் வாமிகாவின் புகைப்படம் நேற்று முதல்முறையாக வெளியாகி வைரல் ஆனதால், இது குறித்து விராத் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.