நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் அவர்களை நிக்க வைத்து கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். அதனால் அவர் நேரடியாக பிரச்சாரத்திற்கு செல்லாமல் வீடு வீடாக நோட்டீஸ் கொடுக்கும் வேலையில் இறங்கிவிட்டார். ரூ. 1000 தருவேன் என்று கூறினீர்கள் அது என்ன ஆச்சு.? கேஸ் சிலிண்டருக்கு மானியம் தருவேன் என்று கூறினீர்கள் அது என்ன ஆச்சு.? என மக்கள் கேள்வி எழுப்பி எழுப்பி சக்கைப்போடு போட்டுள்ளனர். இனியும் மக்கள் காதில் திமுகவினரால் பூ சுற்ற முடியாது. திமுக சொந்தமாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாடகத்தை நடத்தக்கூடிய ஒரு மிகப்பெரிய நாடக கம்பெனி. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பில் நாடகம் நடத்துவார்கள். இந்த மாதம் தேர்தல் வருவதால் நீட் தேர்வை கையில் ஆயுதமாக எடுத்துள்ளார்கள். கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் எந்த இடத்திலும் மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை. தற்போது திமுக பொறுப்பேற்ற பிறகு மீண்டும் மீனவர்களை துப்பாக்கியால் சுடும் சம்பவம் தலைதூக்கியுள்ளது. கச்சத்தீவை தாரைவார்த்த திமுக அரசு தற்போது மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத அரசாக மாறி உள்ளது.