• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கவர்னருக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

ByA.Tamilselvan

Jan 9, 2023

தமிழக சட்டசபை கவர்னர் உரையுடன் இன்று தொடங்கியது .’வாழ்க வாழ்க தமிழ்நாடு’ என்ற கோஷத்துடன் கவர்னருக்கு எதிராக முழக்கமிட்டபடி திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவதற்காக சட்டசபைக்கு வந்தார். கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசினார். இதைத் தொடர்ந்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் வாழ்த்துக்களையும் தமிழில் கூறினார். கவர்னர் தனது உரையை பேசத் தொடங்கியதும் காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் இருக்கையை விட்டு கவர்னர் அருகே வந்து அவர் முன்பு கோஷங்களை எழுப்பினார்கள். ‘வாழ்க வாழ்க தமிழ்நாடு’ வாழ்கவே’, எங்கள் நாடு தமிழ்நாடு… உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். சுமார் 8 நிமிடங்கள் அவர்கள் கையை உயர்த்தியபடி கோஷமிட்டனர். ஆனாலும் கவர்னர் அதை கண்டுகொள்ளாமல் தனது உரையை வாசித்துக்கொண்டு இருந்தார். கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.