தீபாவளி பண்டிகையையொட்டி காரைக்குடி வழியாக தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களில் டிக்கெட் விரைவாக விற்றுத் தீர்ந்தது. தற்போது பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்லவும் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் – நெல்லை ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் – நெல்லை பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் நெல்லை – சென்னை எழும்பூர் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06022) நெல்லையில் இருந்து அக்டோபர் 21 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நெல்லை – சென்னை எழும்பூர் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.