தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால்கடும் தண்டணை விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:- தலைநகரில் பட்டாசு தயாரித்தல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தால் வெடிபொருள் சட்டத்தின் 9பி பிரிவின் கீழ், 5,000 ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளிலும் பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு ஜனவரி 1-ஆம் தேதி வரை முழுமையான தடை உத்தரவை கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் விதிக்கப்பட்டது. ஒளியை ஏற்றுங்கள் பட்டாசுகளை அல்ல.. இவ்வாறு அமைச்சர் கூறினார்.