• Sun. Feb 9th, 2025

கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு

ByKalamegam Viswanathan

Feb 5, 2025

சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தியும் ஏற்பட்டது. இதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீதி 13 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
சோழவந்தான் வைகை பாலம் அருகே உள்ள பிரபல அசைவ ஹோட்டலில் நேற்றைய முன் தினம் இரவு கூடை பந்தாட்டவிளையாட்டு வீரர் பிரசன்னா உட்பட 10 பேரும் மற்றும் குழந்தை உட்பட 12 பேரும் இங்குள்ள தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்றைய முன் தினம் இரவிலிருந்து வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஹோட்டலில் கிரில் சிக்கன் சாப்பிட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பாகவும் பதட்டமாக சூழ்நிலையும் உருவாக்கியது. முதல் கட்டமாக சுகாதாரத்துறை சேர்ந்த டாக்டர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், பூபன்சக்கரவர்த்தி துரித நடவடிக்கைகள் மூலம் ஹோட்டலில் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புதுறை அலுவலர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் ஆய்வு செய்தனர். சுகாதாரத் துறையினர் இந்த ஹோட்டலுக்கு 4,000 ரூபாய் அவதாரம் விதித்துள்ளனர்.இதில் கூடை பந்தாட்ட வீரர்கள் 10 பேர்களில் இரண்டு பேர் மதுரை தனியார் மருத்துவமனையிலும் மற்ற எட்டு பேர் வேறு சில மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். சிகிச்சை பெற்று வருவதில் 3 வயது குழந்தை சோழவந்தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் ஐந்து பேர் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உணவு பொருள் மூலம் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 9பேர் உள்நோயாளியாகவும் மீதி 13 பேர் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். சம்பந்தப்பட்ட ஹோட்டலில் நேற்றைய முன் தினம் இரவு முதல் உணவுப் பொருட்களை பயன்படுத்தி விட்டு நேற்று காலைகடையை சுத்தமாக வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சுகாதாரம், உணவு பாதுகாப்பு,போலீசார், பேரூராட்சி ஆகிய துறையினர் தொடர்ந்து உணவகத்தை ஆய்வு செய்து வருகின்றனர். சோழவந்தான் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சவரிராஜ் தலைமையில் இங்கு 9 வகையான பொருட்கள் சாம்பில் எடுக்கப்பட்டு, மதுரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்டதில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சோழவந்தானில் உள்ள அனைத்து வகையான உணவகங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கெட்டுப்போன உணவுகளை வைத்திருக்கும் பட்சத்தில் கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். அபராதம் மட்டும் விதித்து விட்டு சென்றால், மீண்டும் இந்த தவறுகள் தொடரவே செய்யும். ஆகையால் பொதுமக்களின் சுகாதாரத்தோடு விளையாடும். இது போன்ற வணிக நிறுவனங்களை செயல்பட அனுமதிக்க கூடாது என மாவட்ட சுகாதாரத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.