திருமங்கலம் அருகே 100 நாள் வேலை கேட்டும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் 150 க்கு மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயில் முன்பு தர்ணா போராட்டம்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் முன்பு, சிலார்பட்டி பஞ்சாயத்தில் உள்ள எம். சுப்புலாபுரம் , நரிக்குடி கிராமங்களைச் சார்ந்த 150 க்கு மேற்பட்ட கிராமத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது பஞ்சாயத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை சரிவர கொடுப்பதில்லை எனவும், பஞ்சாயத்து தலைவர் ஞானசேகரன் ஒருதலை பட்சமாக செயல்படுவதுடன், கிராமத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் ,தெரு விளக்கு ,கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்காமல் அலட்சியப்படுத்தி வருவதாகவும் , உள்ளூரில் பஞ்சாயத்து தலைவர் வசிப்பதில்லை, மதுரையில் வசிப்பதால் கிராமத்தில் எந்தவித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாமல் முடங்கி கிடப்பதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகரன் – ஐ மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்றம் செய்து , கிராம மக்களின் நலன் கருதி வளர்ச்சி திட்ட பணிகளையும், அடிப்படை வசதிகளையும், வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய 100 நாள் வேலைத்திட்ட பணிகளையும் வழங்க கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரு மணி நேரமாக நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு பிறகு, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு போராட்டத்தை கைவிட்டனர்.