ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரம் பகுதியில் கொட்டும் மழையில், அம்மனுக்கு பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதியம்மன், வடகாசியம்மன் திருக்கோவில் உள்ளது. திருக்கோவிலில் கடந்த 5ஆம் தேதி புரட்டாசி பொங்கல் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் 13 சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் விழா எடுத்து கொண்டாடி வந்தனர். ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று பூக்குழி ஏற்பாடுகள் விமர்சையாக செய்யப்பட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்க தயாராக இருந்த நிலையில் திடீரென ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்த நிலையில் மழையில் சாமி வீதி உலா வந்து பக்தர்களும் பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் விழா கமிட்டியார்கள் செய்திருந்தனர்.