பசும்பொன்னில் நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழைவை முன்னிட்டு கடும்கட்டுபாடுகள் அமல்படுத்தபடுவதாக தென்மண்டல ஐஜி தகவல்.
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா வருகிற 30-ந் தேதி மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிலையில், தேவர் குரு பூஜை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தேவர் குருபூஜை விழாவில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். போலீஸார் அக்.27 முதல் 30-ம் தேதி வரை பணியில் ஈடுபடுவர். தடை செய்யப்பட்ட பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுபவர்கள், வாகனங்களை, கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கபடும். பசும்பொன்னில் கண்காணிப்பு பணியில் 13 ட்ரோன் கேமராக்கள், 92 நிரந்தரக் கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளது” என்றார்.
ராமநாதபுரம் மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் பசும் பொன் வந்து செல்லும் வாகன வழித்தடங்களும், தடை செய்யப்பட்டுள்ள வாகன வழித்தடங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.