தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 16 அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பாக வரும் 17ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரம் அற்ற குற்றசாட்டுகள் கூறியதாக கூறி, அவருக்கு எதிராக தமிழக அரசு சார்பில், 16 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற திமுக, கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ-களுக்கு எதிரான குற்ற வழக்குகளை திரும்ப பெரும் முன்னர் சம்மந்தபட்ட மாநில உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம்
கடந்த மாதம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை திரும்பப்பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாகவும் 16 வழக்குகளை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 16 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற அனுமதிப்பது தொடர்பான மனு மீது வரும் 17ம் தேதி உத்தரவு பிறப்பிக்கபடும் என தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தார்.