காங்கிரஸில் இருந்து விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அடுத்த விக்கெட்டாக பத்மஜாவும் பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நெருங்க உள்ள நிலையில், தேர்தல் சடுகுடு விளையாட்டு வேகமெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய விஜயதாரணியைத் தொடர்ந்து அடுத்த காங்கிரஸ் பெண் தலைவர் பாஜகவுக்கு செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சூரில் இருந்து போட்டியிட்ட பத்மஜா தோல்வியடைந்தார். அதன்பிறகு அவர் பாஜகவிற்கு தாவ போகிறார் போன்ற தகவல் பரவி வந்தது. இப்போது இந்த தகவல் வேகம் பெற்றுள்ளது. ஒருவகையில் நம்மூர் விஜயதாரணியைப் போலவே பத்மஜா என்ற பெயரும் அங்கு கட்சி மாறப் போவதாக ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பத்மஜா வேணுகோபால் காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்தவர். அதன் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார். ஆனால், மாநில தலைமையுடனான அவரது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தன்னை மோசமாக நடத்தியதாக பகிரங்கமாக பத்மஜா விமர்சித்துள்ளார்.
விஜயதரணி போல் காங்கிரஸில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். வேண்டுமென்றே பெண் வேட்பாளர்களை தோற்கடிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
இருப்பினும் விஜயதரணி போல் கட்சி தாவப்போவதில்லை என கூறி வருகிறார். தன்னை நெருப்பு என்றும், பாஜக தன்னை நெருங்க முடியாது என்றும் கூறியவர் தான் விஜயதரணி. இதே பாணியில், காங்கிரஸில் இருந்து விலகுவது குறித்த கேள்விக்கு, ‘இன்று சரியாக இது குறித்து பேச முடியாது, நாளை பற்றி எப்படி பேசுவது’ என நகைச்சுவையாக பதிலளித்தார் பத்மஜா. இருந்தாலும், பத்மஜா பாஜகவுக்கு செல்வது உறுதி என்கிறார்கள் திருச்சூர் பாஜகவினர்