• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் ட்விட்டர் முடக்கம்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

ByA.Tamilselvan

Nov 8, 2022

அனுமதி பெறாமல் பாடலின் இசையை பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, பாரத் ஜோடோ யாத்திரையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளா, கர்நாடகம் வழியாக தற்போது தெலுங்கானாவுக்கு சென்றுள்ளது.
கர்நாடகாவில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை பயணத்தின் போது காங்கிரஸ், பாரத் ஜோடோ யாத்திரை ட்விட்டர் பக்கங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‘கே.ஜி.எப். 2’ திரைப்பட பாடலின் இசை பயன்படுத்தப்பட்டது. அந்த பாடலின் இசைக்கான காப்புரிமையை எம்.ஆர்.டி. இசை நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாடலுக்கு நாங்கள் காப்புரிமை பெற்றுள்ள நிலையில் தங்களிடம் முன் அனுமதி பெறாமல் ‘கே.ஜி.எப் 2’ பட பாடலின் இசையை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியதாகவும், அது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு எம்.ஆர்.டி. இசை நிறுவனம் பெங்களூரு போலீசில் புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு வணிக கோர்ட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, காப்புரிமை பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்து அனுமதி பெறாமல் அவர்களின் பாடலின் இசையை பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, பாரத் ஜோடோ யாத்திரையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்குமாறு கோர்ட் அதிரடி உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, காங்கிரஸ் மற்றும் இந்திய ஒற்றுமை யாத்திரை ட்விட்டர் கணக்குகள் விரைவில் முடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.