
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையம் முன்பு மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த, மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாகவும், அதனை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில முதல்வர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக கேட்டும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர். பினுலால் சிங் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,
மத்திய அரசின் இனவெறி செயல்பாடால் மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் மாநிலத்தில் ஆளுகின்ற பாஜக ஆரசு மற்றும் மத்திய அரசு அமைதி திரும்ப எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இந்திய மக்களுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார், இதற்கு பதிலளிக்க முடியாமல் அவர் மீது ஒரு வழக்கை பதிவு செய்து அதிகபட்ச தண்டனையாக அவரது எம்.பி பதவியை பறித்துவிட்டனர். அவர் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, எரிகின்ற மணிப்பூர் மாநிலத்தில் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மக்களிடம் குறைகளை கேட்டு தெரிந்து, மக்களோடு மக்களாக அமைதி திரும்ப போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் மத்தியில் ஆளுகின்ற பிரதமரோ , அமைச்சர்களோ அங்கு ஏற்படும் உயிர் சேதங்களை பார்வையிடவோ நடவடிக்கை எடுக்கவோ முயற்சிக்கவில்லை, இதனை கண்டித்து நாம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம், காங்கிரஸ் கட்சியினர் இந்த நாட்டின் மீது ஒவ்வொரு வரும் பற்று கொண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர பாடுபடுவோம் இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் மத்திய அரசு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
