விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 29-ந் தேதி நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
சிவகாசியில் மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 29-ந் தேதி நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். பொதுக்கூட்டம் விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார்நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான மேடை அமைக்கும் பணி தொடங்கியது. இதனை அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கே.டி.ராஜேந்திர பாலாஜி.., மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை கண்டித்தும் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிவகாசியில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்தும் அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின்போது மாவட்ட செயலாளர் கே டி ராஜேந்திர பாலாஜியுடன் , வக்கீல் முத்துப்பாண்டியன், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், ஷாம் (எ)ராஜஅபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி, மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்ஜிஓ காலனி மாரிமுத்து, கார்த்தி, சங்கர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.