• Wed. Apr 24th, 2024

எல்லையில் கிராமங்களை அமைக்கும் சீனா

Byமதி

Nov 19, 2021

சீனா, இந்தியாவுடன் எல்லை பிரச்சினையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சால பிரதேச எல்லையில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தி வருவதோடு, பல்வேறு அத்துமீறல்களையும் செய்து வருகிறது.

அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா தொடர்ந்து கூறி வருவதை, அடுத்து எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனா ராணுவம் நுழைய முயன்றதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில், சீனா அருணாச்சல பிரதேச எல்லையில் கட்டுமானங்களை செய்து வருகிறது. கிழக்கு லடாக்கில் இருந்து அருணாச்சல பிரதேசம் வரை 3,458 கி.மீ. நீளத்துக்கு எல்லை கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ளது. இது இந்திய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை சீனாவிடம் இருந்து பிரிக்கும் எல்லை நிர்ணயமாகும்.

கடந்த ஆண்டு எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அருணாச்சல பிரதேச எல்லை அருகே சீனா ஒரு கிராமத்தை உருவாக்கியது. இதில் 100 வீடுகள் அமைந்து உள்ளன. இது செயற்கை கோள் படம் மூலம் தெரிய வந்தது.

இந்தநிலையில் அருணாச்சல பிரதேச எல்லை அருகே சீனா 2-வது கிராமத்தை உருவாக்கி உள்ளது. இந்த 2-வது கிராமம், முதல் கிராமத்தில் இருந்து 93 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ஷியோமி மாவட்டத்தில் உள்ள 2-வது கிராமத்தில் மொத்தம் 60 வீடுகள் அமைந்துள்ளன. 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கை கோள் படத்தில் அப்பகுதியில் வீடுகள் எதுவும் இல்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள செயற்கை கோள் படத்தில் ஏராளமான வீடுகள் இருப்பது தெளிவாக தெரிகிறது. சீனா அமைத்துள்ள 2-வது கிராமம் அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த இரண்டு கிராமங்களும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதியில் இருந்தாலும், இந்தியாவுடன் சர்ச்சைக்குரிய பகுதி அருகே அமைந்துள்ளன.

இதுகுறித்து இந்திய ராணுவம் தரப்பில் கூறும் போது, “சீனா உருவாக்கியுள்ள கிராமம் அதன் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளது. நமது எல்லைக்குள் எந்த ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை. குறிப்பிட்ட இந்த பகுதி எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு வடக்கே உள்ளது, என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *