ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
2025-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று மூன்றாவது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு அதன் மீது விவாதம் நடந்து வருகிறது. இதில் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பேரவையில் பேசி வருகின்றனர்.
அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசுகையில்,” போராட்டங்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை” என்று குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு இடங்களில் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டம் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும்; போராட்டம் செய்வதற்கென சில பகுதிகள் உள்ளன. திடீரென்று அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறும்போது வழக்குப் போடப்படுகிறது” என்று பதிலளித்தார்.