மருந்து கடைகளில் தனி நபர் யாராவது வந்து சாணி பவுடர், எலி பேஸ்ட் கேட்டால் கொடுக்கக் கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலைகள், தற்கொலைகள், விபத்துக்கள் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இந்தியாவிலேயே அதிகமாக தற்கொலைகள் நடைபெற்ற மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடம் பிடித்திருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 22,207 பேரும், இரண்டாவது இடமான தமிழகத்தில் 18,925 பேரும், மூன்றாவது இடத்தில் உள்ள மத்தியப் பிரதேசத்தில் 14,965 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.நாட்டில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், “மருந்து கடைகளில் தனி நபர் யாராவது வந்து சாணி பவுடர், எலி பேஸ்ட் கேட்டால் கொடுக்கக் கூடாது. மேலும், உயிரை மாய்த்துக் கொள்வதற்கு ஆதாரமான பொருட்களை கடைகளில் பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்கக் கூடாது” என, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.