தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேச முதல்வராக மூன்று முறை இருந்துள்ளார். தற்போது ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இந்நிலையில், அவர் மீது தனிப்பட்ட ரீதியாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை ஆளும் தரப்பை சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விமர்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அதோடு சட்டசபைக்கு இனி அவர் திரும்பினால் அது முதல்வராக மட்டுமே இருக்கும் எனவும் சூளுரைத்து வெளிநடப்பு செய்துள்ளார் சந்திரபாபு நாயுடு.
இதற்குப் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், அப்போது பேச முடியாமல் வருத்தத்தில் கண் கலங்கி அழுதார். அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு வீடியோ மூலம் பதிலடி கொடுத்துள்ளார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான ரோஜா.
“சந்திரபாபு… விதி யாரையும் விட்டு வைக்காது. அனைவரது கணக்கையும் சரியாக கணக்கு பார்த்து தீர்த்துவிடும். அன்று 72 வயதில் என்.டி.ஆரை நீங்கள் கலங்க செய்தீர்கள். இன்று 71 வயதிலேயே அதை நீங்களும் அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள். அதனால் தான் சொல்வார்கள் ‘நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்பும் என்று’.
தங்கள் மனைவி குறித்து பேசிவிட்டார்கள் என கலங்கும் நீங்கள் தான் அதிகாரத்தில் இருந்த போது ‘ரோஜா, ப்ளூ பிலிமில் நடிக்கிறார்’ என சொன்னீர்கள். எங்களுக்கு குடும்பம் இல்லையா? பிள்ளைகள் இல்லையா?
இந்த நிலையில் உங்களது போலியான நீலிக் கண்ணீருக்கு யாரும் ஆதங்கப்பட்ட மாட்டார்கள். எனக்கு தெரிந்து இனி நீங்கள் உங்கள் வாழ்நாளில் சட்டசபைக்கு திரும்ப வாய்ப்பில்லை. அதற்கு காரணம் உங்கள் சபதம் தான். Bye.. Bye… பாபு” என சொல்லியுள்ளார் ரோஜா.