• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு

Byவிஷா

May 16, 2024

தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தற்போது காலநிலை மாறி சில மாநிலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே பொழிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி பாலக்காடு உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மே 19ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளார். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.