தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அடுத்தகட்டமாக தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ வலுவடைவது பற்றி நாளை மறுநாள்தான் கணிக்க முடியும்.
நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் 9ஆம் தேதியில் இருந்து அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வருகிற 10ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் 14ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 9ஆம் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் 12 முதல் 14ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.