வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு பரவலாக கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும், அது அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 14-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும், பரவலாக கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
அதிலும் குறிப்பாக, நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மேற்சொன்ன 2 நாட்களில் மிக கனமழை பெய்யக்கூடிய இடங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனையொட்டி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் நாளையும், நாளை மறுதினமும் மேற்சொன்ன பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.