• Fri. Apr 19th, 2024

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இனி ஆஜராக முடியாது என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரிய அப்போலோவின் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மூன்று விஷயங்களை அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. அதாவது “ஒருதலைபட்சமாக ஆறுமுகசாமி ஆணையம் நடந்துகொள்கிறது. இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர் ஏராளமானோர் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கும் நிலையில் எங்களது மருத்துவர்களையே மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கின்றனர்.

ஆணையத்தில் நாங்கள் கொடுக்கும் தகவல்களையெல்லாம் வேண்டுமென்றே ஆறுமுகசாமி ஆணையம் கசியவிடுகின்றனர். இதனால் எங்கள் நற்பெயர் கெட்டுப்போகிறது. இதனால் இதை தடுக்கும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடக்கூடிய உரிமை எங்களுக்கு இருக்கிறது. அந்த உரிமையின் அடிப்படையில்தான் ஆணையம் முன்பு ஆஜராக முடியாது என தெரிவிக்கிறோம். அதிகார வரம்பை மீறி ஆறுமுகசாமி ஆணையம் நடந்துகொள்கிறது. நிறைய உத்தரவுகளை போடுகிறார்கள்.

இதில் உண்மையை கண்டறிய நடக்கும் ஆணையமாக தெரியவில்லை. நாங்கள் ஆணையத்தை கலைக்க கோரவில்லை. ஆனால் ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறவில்லை. அப்படி இருக்க மருத்துவ ரீதியிலான விவரங்களை நாங்கள் எந்த அடிப்படையில் தெரிவிப்பது. நீதிமன்றத்தில் என்ன விஷயங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கிறோம். ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போதைய அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு பிரைவேசி தேவைப்பட்டதாக கூறி சிசிடிவி கேமராக்கள் அகற்றபட்டன என்று அப்பலோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *