சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் வருகைப் பதிவேட்டில் சாதிகளை பல வண்ணங்களில் வேறுபடுத்திக் காட்டியிருப்பது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 வகுப்புவரை கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட மாணர்வகள் இங்கு பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் 9ஆம் வகுப்பு குறிப்பேட்டில் மாணவிகளின் பெயர்களுக்கு அருகிலேயே அவர்களின் சாதிகளையும் சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு பேனாக்களைக்கொண்டு வேறுபடுத்தி குறிப்பிட்டுள்ளனர். இந்த வருகைப் பதிவேட்டின் புகைப்படமானது சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் பொன்முடியிடம் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியபோது, பள்ளியில் கல்வி உதவித்தொகை, மடிக்கணினி, சைக்கிள், உள்ளிட்டவைகளுக்காக சாதிவாரியாக பிரிப்பதற்காக அவ்வாறு எழுதப்பட்டு இருப்பதாகவும், அதை மாணவிகளுக்கு அனுப்பியது தவறு என்றும் தெரிவித்தார். மேலும் இதுபோல் நிகழாது எனவும் உறுதி அளித்துள்ளார்.
கடந்த மாதம் சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் மாணவர்களை சாதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குநரகம் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை உடனடியாக ஆய்வு செய்ய அறிவுறுத்தியது. மேலும் பள்ளிகளில் மாணவர்களை சாதிவாரியாக பிரிக்கக்கூடாது; நன்றாகப் படிக்கும் மாணவர்கள், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் என்று பிரித்து வைக்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் பெயர்களை அகரவரிசைப்படி அல்லது அவர்கள் வரிசை எண் அடிப்படையில் மட்டுமே பட்டியலிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.