பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் மற்றும பெண் உட்பட 3 பேருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகை தருவதையொட்டி, ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக பாஜகவில் மாவட்ட துணைத் தலைவியாக உள்ள ஆண்டாளுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த நிவேதாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த 21-ஆம் தேதி இரவு பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், நிவேதா உள்ளிட்ட 3 பேர் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி தேவி ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர்கள் இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர், நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைந்து தாக்குதல், காயப்படுத்துதல் போன்ற 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.