கர்நாடக சட்டமேலவை தேர்தலில்ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையேகடும் போட்டி ஏற்பட்டது.
இதில்பாஜக 12 இடங்களில் வென்றதன் மூலம் அதிக இடங்களைகைப்பற்றியுள்ளது.
75 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமேலவையில் காலியாக இருந்த 25 இடங்களுக்கான தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸூம் தலா 20 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 6, ஆம் ஆத்மி கட்சி 3, சுயேச்சைகள் 30 பேரும் போட்டியிட்டனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் 99 ஆயிரம் பேர் தேர்தலில் வாக்களித்தனர்.
2023-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடககாங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோர் போட்டிபோட்டு வாக்கு சேகரித்தனர். நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து இறுதிவரை பாஜகவுக்கும் காங்கிரஸூக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
சிக்கமகளூரு, ஷிமோகா உள்ளிட்ட 12 இடங்களில் பாஜக வெற்றிப் பெற்றது. தட்சின கன்னடா, கோலார் உள்ளிட்ட 11 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜதவும், சுயேச்சையும் தலா 1 தொகுதியில் வெற்றி பெற்றன.
எம்எல்சியான தேவகவுடாவின் பேரன் கர்நாடகா சட்டமேலவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் சூரஜ் ரேவண்ணா போட்டியிட்டார். இதில் 1533 வாக்குகள் வித்தியாசத்தில் சூரஜ் ரேவண்ணா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சங்கர் 748, விஷ்வநாத் 421 வாக்குகளை பெற்றனர். தேவகவுடாவின் மகன் முன்னாள் முதல்வர் குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, குமாரசாமியின் மனைவி அனிதா, ரேவண்ணா மனைவி பவானி, ரேவண்ணாவின் மூத்த மகன் பிரஜ்வல் ஆகியோரை தொடர்ந்து தற்போது சூரஜ் ரேவண்ணாவும் அரசியலில் ஈடுபட்டு, எம்எல்சி ஆகியுள்ளார்.