விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.பி. மல்யுத்த வீரர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன. இதில், உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி. பிரிஜ்பூஷன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பில் இருக்கிறார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த குறிப்பிட்ட மல்யுத்த போட்டியில் 15 வயதுக்கு உட்பட்டவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று விதி உள்ளது. அதனால் கூடுதல் வயது கொண்ட நபர் ஒருவர் போட்டிக்கு அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் அந்த நபர் எம்.பி.யை தனக்கு தெரியும், அவர்தான் தன்னை போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னதாக விழா நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இந்த விஷயம் எம்.பிக்கு தெரியவந்தது.
இதனையடுத்து பொறுமை இழந்த எம்.பி. பிரிஜ்பூஷன் அந்த நபரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.