• Fri. Feb 14th, 2025

மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வராது: மம்தா பானர்ஜி

ByA.Tamilselvan

Jul 28, 2022

மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்குவராது என பேசியுள்ளார்.
மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது :- எனது கட்சிக்கு எதிராக தீய நோக்கத்துடன் பிரசாரம் செய்யப்படுகிறது. ஒருவர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் கோர்ட்டு கண்டிப்பாக தண்டிக்கட்டும். ஆனால் புலனாய்வு அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பயன்படுத்தப்படக்கூடாது. நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தை நடத்துகிறபோது, அதில் தவறுகள் நடக்கலாம். யாராவது ஏதாவது தவறு செய்துவிட்டால் அது சட்டப்படி நிரூபிக்கப்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தீய நோக்கத்துடனான பிரசாரத்தை நான் எதிர்க்கிறேன். மத்தியில் ஆளும் பா.ஜ.க.வால் எதிர்க்கட்சி தலைவர்களுடன், தொழில் அதிபர்களும் விசாரணை அமைப்புகளால் அச்சுறுத்தப்படுகிறார்கள். விசாரணை அமைப்புகள் ஒரு சார்பின்றி நடந்து கொண்டால் எனக்கு அதில் பிரச்சினை இல்லை. இந்த நாட்களில், நீங்கள் ஏதாவது ஒன்றுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் இடைநீக்கம் செய்து விடுகிறார்கள். (நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் விவாதம் நடத்தக்கோரி பதாகைகளுடன் போராடிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை இப்படி அவர் சாடினார்.) 2024-ம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடையும். நான் எண்ணிக்கை பற்றி கூற முடியும். அவர்கள் எங்கிருந்து வருவார்கள் என சொல்ல முடியும். ஆனால், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உறுதியாக சொல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.