• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற பினராயி!

கேரள மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஆறு மாவட்டங்களில் தை முதல் நாள் (ஜன.14) அன்று உள்ளூர் பொங்கல் விடுமுறை பெற்று தர என கேரள தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில், “தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கலுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14ஆம் தேதி, புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14ஆம் நாளை அறிவிக்க வேண்டு என தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஜனவரி 15ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பதிலாக 14ஆம் தேதிக்கு விடுமுறை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய ஆறு மாவட்டங்களில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இந்த மாவட்டங்கள் அனைத்தும் தமிழ்நாடு-கேரள எல்லையையொட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.