விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசுப் பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை, யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில் இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும், இயக்கத்தினர் வெளியிடக் கூடாது. இது விஜய்யின் கடுமையான உத்தரவாகும், யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தைவிட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கையை விமர்சித்துள்ள பால்முகவர் சங்க நிர்வாகி பொன்னுசாமி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை சமூக வலைதளங்களிலோ, போஸ்டர் மூலமோ, பொதுவெளிகளிலோ அவமானப்படுத்தினால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள நடிகர் விஜய் அவர்கள் தனது திரைப்பட வெளியிட்டு சமயங்களில், தனக்கோ, திரைப்படத்திற்கோ கட்அவுட் வைத்து அதன் மேலேறி அதற்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்கிறேன் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வீண் வேலைகளில் ஈடுபட கூடாது. தங்களின் உயிரை துச்சமாக எண்ணி அவ்வாறு செயல்படுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி ரசிகர்களை நல்வழிப்படுத்த ஏன் முன் வரவில்லை..? அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வந்தால் ரத்தம், ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்றால் தக்காளி சட்னியா? என விஜய்க்கு கேள்வி எழுப்பி உள்ளார்.