திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு ;
கடத்தலில் ஈடுபட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தாய், மகன் உட்பட 4 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் ரமேஷ் உத்தரவின் பேரில், அவரது தனிப்படை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாகக் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து போலீசார் நடத்திய சோதனையில், அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.600 கிலோ கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா (40), அவரது 17 வயது மகன் யூத் ராஜ், பிரபாகரன் (40) மற்றும் ஜெகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சங்கீதாவிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் ஒடிசா மாநிலத்தில் இருந்து கிலோ கணக்கில் மொத்தமாகப் கஞ்சாவை வாங்கி வந்து, அதனைப் புதுச்சேரியில் ரகசிய இடத்தில் பதுக்கி வைத்து, அங்கிருந்து திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குக் கொண்டு சென்று சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இந்த நெட்வொர்க்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கீதாவை தவிர மற்ற மூவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் இது போன்ற கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. சோதனையின்போது கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஐந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




