• Sun. Feb 9th, 2025

“பேட் கேர்ள்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

Byஜெ.துரை

Jan 27, 2025

அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், ‘பேட் கேர்ள்’படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர்கள் கலந்து கொண்டு கொண்டனர்.

பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘பேட் கேர்ள்’படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் கதை நாயகி அஞ்சலி சிவராமன் பேசும் பொழுது..,

இயக்குனர் இந்த கதையை எனக்கு சொல்லும் பொழுது, ஒரு உண்மைத் தன்மை இருப்பதை உணர்ந்தேன். மேலும் இந்த கதையில் வரும் ரம்யா கதாபாத்திரம், எனது ரியல் லைஃப் கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போல் இருந்தது. முதல்முறையாக ‘ஒரு முழு கதையும் என்னை வைத்து நகர்கிறது’ எனும்போது எனக்கு சிறிது தயக்கமாக இருந்தது, ஆனால் வெற்றிமாறன் சார் மற்றும் வர்ஷா பரத் என் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது. என் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி என்று கூறினார்.

இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தைப் பற்றி பேசும் பொழுது..,

இந்தப் படத்தின் டிரைலர் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. வர்ஷா பரத் எப்படிப்பட்ட ஆளுமை என்று பார்க்கும் பொழுது, ” வெற்றிமாறன் போன்ற மிகப்பெரிய ஆளுமையிடம் ஏதோ இரண்டு வருடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து ஒரு படம் பண்ணினோம் என்று இல்லாமல், முழுக்க முழுக்க சினிமாவை உயிராக நேசித்து, அதை ஒவ்வொரு இடத்திலும் கற்றுத் தெரிந்து,தன் குருவுக்கு மரியாதை செலுத்தும் ஆளுமையாகத்தான் இந்தப் படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது வர்ஷா பரத் தெரிகிறார்”. பொதுவாக க்ளோசப் ஷாட் எடுப்பது மிகவும் கடினம், ஆனால் இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது, க்ளோசப் சாட் நிறைய உள்ளது. ஹீரோயின் அஞ்சலி சிவராமனின் கண் அழகாக உள்ளது. இந்த மாதிரியான படங்கள் தான் சினிமாவிற்கு வர வேண்டும். ஏனெனில் பேட் கேர்ள், என்ற பெண் சார்ந்த உளவியல் படத்தை, ஒரு ஆண இயக்குனரால் எடுக்க முடியாது பெண்ணிய இயக்குனரால் மட்டுமே எடுக்க முடியும். மேலும் இந்த மாதிரியான கதையை எடுப்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

நடிகை டாப்ஸி பண்ணு படத்தைப் பற்றி கூறும்பொழுது..,

15 வருடத்தில் வெற்றிமாறன் சார் இந்தப் படத்திற்கு தான் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். நான் எப்பொழுதுமே நினைப்பதுண்டு, ஏன் எப்பொழுதுமே ஆண்களைப் பற்றிய படங்களே வருகிறது? ஏன் பெண்களைப் பற்றிய படம் பெரிதாக வரவில்லை? என்று யோசிப்பேன், ஆனால் இந்த படம் பெண்களைப் பற்றி பேசும் படமாக மட்டும் இல்லாமல், படத்தின் இயக்குனரே பெண்ணாக இருப்பது தனி சிறப்பு. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறினார்.

இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் கேஷ்யப் இந்த படத்தை பற்றி பேசும்பொழுது..,

விடுதலை பட சூட்டிங்கின் போதுதான் வெற்றிமாறன் இந்த படத்தின் கதையை பற்றி கூறினார். படத்தின் முதல் பாதியை பார்க்கும் பொழுது, நான் பிரமித்து போயிட்டேன். பொதுவாக ஏதாவது ஒரு படத்தின் கதையை பார்க்கும் பொழுது, இதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எனக்கு தோன்றும், ஆனால் இந்தப் படத்தை பார்க்கும் பொழுது இயக்குனர் வர்ஷா பரத்தால் மட்டுமே இப்படி எடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது.மேலும் பெண்கள் உலகம் எப்படிப்பட்டது என்று ஆண்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்தப் படம் எடுக்கப்பட்டது போல் இருந்தது. இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்று கூறினார்.

படத்தின் இயக்குனர் வர்ஷாபரத் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது..,

பொதுவாக வெற்றிமாறன் சாரிடம், நாங்கள் ஏதாவது ஒரு ஐடியாவை சொல்லிக் கொண்டே இருப்போம். அதைக் கேட்டு அவர் இந்த கதை தேரும், தேராது! படமாக வரும், வராது என்று ஃபீட்பேக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்படித்தான் இந்தப் படத்தின் கதையைப் பற்றி கூறும் பொழுது, இது ஒரு படமாக வரும் என்று கூறினார். இப்படித்தான் “பேட் கேர்ள்” படத்தின் கதை உருவானது.

நம் தமிழ் சினிமாவில் பெண் என்றால் தாய், கடவுள், தேவதை இப்படி பல விதமாக காட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் என்ன நினைக்கிறாள், அவளின் உண்மையான உணர்வு என்ன என்பதை சொல்லக்கூடிய கதை தான் இந்த பேட் கேர்ள். பெண்களை புனிதர்களாக பார்க்காதீர்கள், மனிதர்களாக பாருங்கள் என்று தான் இந்த படம் கூறுகிறது என்று கூறினார்.

இயக்குனர் வெற்றிமாறன் பேசும் பொழுது..,

இந்தக் கதை எனக்கு முன்பே தெரிந்தாலும் கூட, கடைசியாக தான் இந்தப் படத்தில் இணைந்தோம். இந்தப் படத்தின் சூட்டிங்கிக்கு நான் எப்பொழுதாவது செல்லும் பொழுது, முதல்முறையாக சாந்தி பிரியா மேடமை சந்தித்தேன். அப்பொழுது அவர், ” சார். இந்த படம் எல்லா ஃபெஸ்டிவலையும் ஹிட் அடிக்கும் சார். நேஷனல் அவார்டு கூட கிடைக்கும் சார் என்று கூறினார்.

அப்பொழுது நான் வர்ஷாவிடம், இந்தப் படத்தை உன்ன விட, உன் படத்துல நடிக்கிறவங்க ரொம்ப அதிகமா நம்புறாங்க. அதனால இந்த படத்தை நல்லா எடுத்துடுமா? என்று கூறினேன். வர்ஷாவும் எனக்கு கொடுத்த கமிட்மெண்டை விட 100% அதிகமாகவே கொடுத்துள்ளார். மேலும் இந்தப் படம் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியை பெருமைப்பட வைக்கும். என்றார்.