தெற்கு ரயில்வே கடந்த ஆண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டுள்ளதாகவும், 1752 குழந்தைகளை மீட்பதிலும் சாதனை செய்துள்ளதாகவும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கூறியுள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தேசியக் கொடியேற்றி, அதைத்தொடர்ந்து நடைபெற்ற ரயில்வே காவல்துறை அணிவகுப்பை ஏற்றக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்பு படை தலைமை ஆணையர் ஜி.எம்.ஈஸ்வர ராவ், தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளர் கௌசல் கிஷோர், சென்னை கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா, ரயில்வே பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங், மூத்த அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களுடன் இணைந்து, நமது நாட்டின் ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் வெல்ல முடியாத உணர்வைக் குறிக்கும் வகையில் மூவர்ண பலூன்களை வானத்தில் பறக்கவிட்டார். தெற்கு ரயில்வேயின் குடியரசு தினவிழாவில் பரதநாட்டியம், மோகினி ஆட்டம், களரி மற்றும் நாட்டுப்புற நடனம் போன்ற தென்னிந்திய நடன பாணிகளின் மயக்கும் வகையில் இருந்தது. அதுபோல, தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பால் நடத்தப்படும் சிறப்பு குழந்தைகளுக்கான ஆஷ்ரயா பள்ளி மாணவர்களின் ஈர்க்கக்கூடிய நடன நிகழ்ச்சி மூவர்ணக் கொடியை அழகாகக் காட்சிப்படுத்தியது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சிறப்பாக செயல்பட்ட ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே துறையினருக்கு பதக்கங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது, தெற்கு ரயில்வே வருவாய், சரக்கு, பாதுகாப்பு, நேர மேலாண்மை, திட்ட செயலாக்கம், பயணிகளுக்கான வசதிகள், பணியாளர்கள் நலம் என அனைத்திலும் வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று கூறினார்.
தெற்கு ரயில்வேயின் வருவாய் நடப்பு நிதியாண்டில் ரூ.9,170 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 5 சதவீதம் அதிகம். அதுபோல், 54.5 கோடி பயணிகளை கையாண்டுள்ளது. அதுபோல, பண்டிகை, விடுமுறை நாள்களில் பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப,. 2,329 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேக்குட்பட்ட 300 கி.மீ. ரயில்வே வழித்தடம் மேம்படுத்தப்பட்டு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 13 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளை வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சமீப காலமாக ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பெட்டிகளிலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 11 ரயில்கள் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், ரயில்களை மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும்.
நடப்பு நிதியாண்டின் சாதனையாக கன்னியாகுமரி-நாகர்கோவில் டவுன் இரட்டை ரயில் பாதை பணி நிறைவடைந்துள்ளது. அதேபோல், சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இரட்டை ரயில் வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் 255 கி.வாட் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சோலார் மூலம் 5.84 மில்லியன் வாட் மின்சாரமும், காற்றாலை மூலம் 10.5 மில்லியன் வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. ரயில்வேயின் பழைய பொருள்களை அகற்றியதன் மூலம் ரூ.438 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2023-24 நிதியாண்டில் 11,153 பேர் புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
அதுபோல, கடந்த டிசம்பர் வரை ரயில்வே பொருள்களை திருடிய 604 பேர் கைது செய்யப்பட்டு ரூ.24 லட்சம் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. அதுபோல் பயணிகளிடம் திருடிய 602 பேர் கைது செய்யப்பட்டு ரூ.2.05 கோடி பொருள்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 1,752 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.