கேரளாவின் வாளையார் வனப்பகுதி மலம்புழாவில், மூன்று வயதுடைய யானைக் குட்டி ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. குட்டி யானை இறந்தது கூட தெரியாமல் அதனைத் தாய் யானை எழுப்ப முயல்கிறது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இறந்த குட்டி யானையை அதன் தாய் யானை எழுப்ப முயல அதற்கு துணையாகவும், பாதுகாப்பாகவும் இரண்டு யானைகள் அதான் அருகில் நின்றுள்ளன. அதனை பார்த்த உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த வனத்துறையினர் மற்ற மூன்று யானைகளை காட்டுக்குள் விரட்டியுள்ளனர். பின்னர் இறந்து போன குட்டி யானைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இந்த குட்டி யானை ஆழ்துளை கிணற்றுக்கு செல்லும் மின்சார ஒயரை தவறுதலாக கடித்த காரணத்தினால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.