ஒரே மாநிலத்தில் ஒன்பது தங்கச்சுரங்கங்கள் ஆய்வில் கண்டுபிடித்திருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.
ஒடிசா மாநிலத்தின் 3 மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல் ஆய்வு மையம் தங்கச் சுரங்கம் தொடர்பாக பல ஆய்வுகள் செய்து வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர், இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல் ஆய்வு மைய இயக்குநரகம் நடத்திய ஆய்வில், ஒடிசாவின் 3 மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தியோகார், கியோஞ்ஜஹார், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் மூன்று தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் கியோஞ்சஜார் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் தலா நான்கு இடங்களிலும், தியோகார் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் பூமிக்கடியில் தங்கம் புதைந்துகிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒடிசாவில் மூன்று மாவட்டங்களில் 9 இடங்களில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அம்மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ராவில் இரு பெரிய தங்கச் சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்திருந்தது. ஆய்வின் படி இந்தச் சுரங்கங்களில் 3,350 டன் அளவுள்ள தங்க படிமங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோன்பாஹ்தி என்ற இடத்தில் 2700 டன் அளவுள்ள தங்க படிமங்களும் ஹார்டி எனும் சுரங்கத்தில் 650 டன் தங்க படிமங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த கையிருப்புத் தங்கத்தின் அளவைவிட 5 மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகிறது.