தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், செயல்பட்டுவருகிறது. மன்னார்குடி அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அதே அலுவலகத்தில் மாடியிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சித்திரவேல் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உதவி செயற்பொறியாளர் பேபியிடமிருந்து ரூ.12,500, மேலும் உதவி செயற்பொறியாளருக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்த ஒப்பந்தக்காரர்கள் வைத்திருந்த ரூ.58,000 ஆக மொத்தம் ரூ. 70,500 -ஐ பறிமுதல் செய்தனர். இதனையடுத்து உதவி செயற்பொறியாளர் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி நாகை மாவட்ட லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சித்ரவேலு கூறும்போது, “எங்கள் துறையில் கட்சி பேதம் பார்ப்பதில்லை. ரெய்டு நடந்த அன்று லஞ்சம் கொடுப்பதற்காக வந்திருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றிய துணைச் சேர்மன், தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகர்கள் உள்பட 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என்றார்.