• Sat. Feb 15th, 2025

மகாத்மா காந்தியின் தியாகத்தை போற்றி வணங்குவோம்… அண்ணாமலை புகழாரம்

ByIyamadurai

Jan 30, 2025

காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி அவரது உயரிய போதனைகளைப் பின்பற்றி புகழ் சேர்ப்போம் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடியவர் மகாத்மா காந்தி. இந்த நிலையில் 1948 ஜனவரி 30-ம் தேதி டெல்லி பிர்லா மாளிகை தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் காந்தியடிகளின் 78வது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் காந்தியடிகளின் நினைவு நாளை போற்றும் வகையில் சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,, “அகிம்சையும், வாய்மையும், அறவழியும் போதித்த மகாத்மா காந்தி நினைவு தினமான இன்று, தேசத்துக்காக அவர் செய்த தியாகங்களைப் போற்றி வணங்குகிறோம். சுதந்திர இந்தியாவுக்கான மகாத்மாவின் கனவுகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி, அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தி வருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தலைமையிலான மத்திய அரசு. அமைதி, சகிப்புத்தன்மை, ஒருமைப்பாடு, கலாச்சாரப் பாதுகாப்பு என மகாத்மாவின் உயரிய போதனைகளைப் பின்பற்றி, அவருக்குப் புகழ் சேர்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.