தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காவல் தெய்வமான மேலத்தெரு முனியாண்டி சுவாமி கோவில் சித்திரைத்திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டி விரதம் இருந்த சிறுவர்கள் , பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தும், வேல் அலகு குத்தியும் ஊர்வலமாக ஆடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மஞ்சள் நீராடி மேளதாளம் முழங்க ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதி வழியாக ஆடிய படி முனியாண்டி சுவாமி கோவிலை அடைந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இதில் நிறைய சிறுவர் சிறுமியர், பெண்கள் அருள் வந்து பக்தி பரவசத்துடன் ஆடி வந்தனர்.
முன்னதாக பெண்கள் அனைத்து தெருக்களிலும் கோலமிட்டும், கோவிலில் வந்து பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். முன்னதாக நேற்று முன்தினம் மாபெரும் அன்னதானம் விருந்தும் ,அதைத் தொடர்ந்து இளைஞர் குழு சார்பாக இரவு விருந்தும் வழங்கப்பட்டது. விழாவில் இரவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.