தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் பொறியாளர் மீது தி.மு.கவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு.
‘தா.பேட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழுதலைவர் சர்மிளா பிரபாகரன் தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய ஆணையர்கள் ஆர்.மனோகரன், ஆர்.பி.குணசேகரன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். அப்போது கூட்டத்தில் தி.மு.கவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தில்குமார், தனசேகரன், சரவணன் உள்ளிட்ட பலர் ஒன்றிய பொறியாளர் மாதவன் மீது திட்டங்களுக்கான பணிகள் தேர்வு செய்வதில் தாமதம், முடிவுற்ற பணிகளுக்கு பில் வழங்குவதில் காலதாமதம், அனுமதிக்கப்பட்ட பணிகளில் தொகை குறைவாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொறியாளரை மாற்றக்கோரி ஒன்றிய ஆணையர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒன்றிய குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் பேசினர். இதனால் ஒன்றிய கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் சர்மிளா பிரபாகரன் மற்றும் ஆணையர்கள் ஒன்றிய கவுன்சிலர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒன்றிய வளர்ச்சி திட்டபணிகள் மற்றும் செலவினங்கள் தொடர்பாக தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய பொறியாளர்கள் ஜெயசுதா, மாதவன், பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் உள்பட பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.