• Thu. Mar 28th, 2024

தமிழகத்தில் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் : ஓபிஎஸ்

ByA.Tamilselvan

Jun 12, 2022

ஒரே கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் யார் பிரதான எதிர்கட்சி என விவாதம் நடைபெற்று வருகிறது.பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்கட்சியாக இருப்பது எங்கள் நோக்கமல்ல ஆளும் கட்சியாக மாறுவதே எங்கள் நோக்கம் என போட்டியளித்தார்.இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் அதிமுக மட்டுமே எதிர்கட்சி,தமிழகத்தில் அடுத்த ஆட்சி அ.தி.மு.க ஆட்சிதான் என அறிக்கைவெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது; ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை அம்பலப்படுத்துவது; ஆளும் கட்சியின் அமுலில் ஏற்படும் அல்லல் அவதியை எடுத்துக்காட்டுவது; ஆளும் கட்சியின் சட்டதிட்டங்களும், நிர்வாக முறைகளும் ஏழைகளை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது;
ஆளும் கட்சி என்னென்ன விதமான இதமளிக்கும் சட்டம் செய்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவது; உரிமையையும், உடமையையும் பறிகொடுக்கும் போக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும்போது கண்டிப்பது, எதிர்த்து கிளர்ச்சி நடத்துவது போன்றவைதான் எதிர்கட்சிக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள்” என பேரறிஞர் அண்ணா கூறியிருக்கிறார்.
பேரறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு ஏற்ப, கடந்த ஓராண்டு காலமாக சிறந்த எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலேயும் இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கம் அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கம்.
உண்மை நிலை இவ்வாறிருக்க, எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அதிமுக பின்தங்கி இருப்பது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு, சமீப காலமாக அதுகுறித்த விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தருணத்தில் அதிமுக சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிராதன எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்படுகிறது என்பதை சில முக்கிய எடுத்துக்காட்டுக்களுடன் சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஏழாண்டுகள் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு அறிவித்தோடு புதிய சான்றிதழ்களை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதில் காலதாமதம் ஏற்பட்டபோது, அதனை வலியுறுத்தி நான் 14-07-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டேன். இதனையடுத்து, புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆவின் பால் அட்டைதாரர்களிடமிருந்து தனி நபர் விவரங்களைப் பெற அரசு ஆணையிட்டபோது அதற்குக் கண்டனம் தெரிவித்து நான் 09-08.2021 அன்று அறிக்கை வெளியிட்டேன். இதனைத் தொடர்ந்து தனி நபர் விவரங்களைப் பெறுவது கைவிடப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலைகளை சுட்டிக்காட்டி 23-09-2021 அன்று நான் விரிவான அறிக்கை வெளியிட்டேன். இதனைத் தொடர்ந்து 2,500 ரவுடிகளை காவல் துறையினர் பிடித்தனர்.இதுபோன்று பல்வேறு மக்கள் கோரிக்கைகளுக்காக போராடி
அதிமுக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுகளே போதும். எங்களைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான பணிகளை மேற்கொள்ளுதல்; எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சியினரின் மக்கள் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டுதல்.
இதுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம். ஓராண்டு கால திமுக ஆட்சியின் அவல நிலையையும், அதிமுகவின் செயல்பாடுகளையும் வைத்தே தமிழகத்தில் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என்பதை அறுதியிட்டு உறுதியாக என்னால் சொல்ல முடியும்.
திமுக அரசைப் பொறுத்தவரை, மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், மதம் சார்ந்த விஷயங்களில் மூக்கை நுழைத்து பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதுவே ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *