

மதுரை திருப்பரங்குன்றம் அருகே பழங்காநத்தம் ஜெயம் தியேட்டரில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் தியேட்டர் வாசலில் ரஜினி ரசிகர்கள் கூடினர் .
மதுரை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் பால தம்புராஜ் தலைமையில் 800க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரையரங்கு வாசலில் திரண்டு “ஜெயிலர் ” திரைப்படத்தை கொடி தோரணங்களுடன் அலங்கரித்து கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மேலும் ரஜினி மன்ற மாவட்ட துணைத் தலைவர் அழகர்சாமி மற்றும் முன்னாள் காவல் துணை ஆணையரும் ஆலோசகருமான குமரவேல் ஆகியோர் ரசிகர்கள் முன்னிலையில் இன்று முதல் குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ரஜினி ரசிகர்களின் இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களை பெரிதும் கவர்ந்தது.
மதுப்பழக்கத்திற்கு எதிராக ரஜினி ரசிகர்கள் “குடிக்க மாட்டோம்” என உறுதிமொழி எடுத்தது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

